பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 58 : கண்ணோட்டம்
குறள் 571:
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகைஉண்மையான் உண்டிவ் வுலகு.
விளக்கம்:
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.
குறள் 572:
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்உண்மை நிலக்குப் பொறை.
விளக்கம்:
கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது, கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருத்தல் நிலத்திற்குச் சுமையே தவிர வேறு பயனில்லை.
குறள் 573:
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்கண்ணோட்டம் இல்லாத கண்.
விளக்கம்:
பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.
குறள் 574:
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்கண்ணோட்டம் இல்லாத கண்.
விளக்கம்:
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.
குறள் 575:
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்புண்ணென்று உணரப் படும்.
விளக்கம்:
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.
குறள் 576:
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோடியைந்துகண் ணோடா தவர்.
விளக்கம்:
கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் கண் இருந்தும் காணாத மரத்தினைப் போன்றவர்.
குறள் 577:
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்கண்ணோட்டம் இன்மையும் இல்.
விளக்கம்:
கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர், கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லா திருத்தலும் இல்லை.
குறள் 578:
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்குஉரிமை உடைத்திவ் வுலகு.
விளக்கம்:
தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.
குறள் 579:
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்பொறுத்தாற்றும் பண்பே தலை.
விளக்கம்:
தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து அவர் செய்த குற்றத்தைப் பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.
குறள் 580:
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்கநாகரிகம் வேண்டு பவர்.
விளக்கம்:
எவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை
விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.