பொருட்பால்
அரசியல்
அதிகாரம் 56 : கொடுங்கோன்மை
குறள் 551:
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டுஅல்லவை செய்தொழுகும் வேந்து.
விளக்கம்:
குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் கொடியவன்.
குறள் 552:
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்கோலொடு நின்றான் இரவு.
விளக்கம்:
ஆட்சிக்குறிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல் , போகும் வழியில் கள்வன் கொடு என்று கேட்பதைப் போன்றது.
குறள் 553:
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்நாடொறும் நாடு கெடும்.
விளக்கம்:
நாள் தோறும் தன் ஆட்சியில் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறைசெய்யாத அரசன், நாள் தோறும் மெல்ல மெல்லத் தன் நாட்டை இழந்து வருவான்.
குறள் 554:
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்சூழாது செய்யும் அரசு.
விளக்கம்:
ஆட்சிமுறை கெட்டுக் கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.
குறள் 555:
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை.
விளக்கம்:
முறை செய்யாதவனுடைய செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.
குறள் 556:
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்மன்னாவாம் மன்னர்க் கொளி.
விளக்கம்:
அரசர்க்கு புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும், அஃது இல்லையானால் அரசர்க்கு புகழ் நிலைபெறாமல் போகும்.
குறள் 557:
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்அளியின்மை வாழும் உயிர்க்கு.
விளக்கம்:
மழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ, அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.
குறள் 558:
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யாமன்னவன் கோற்கீழ்ப் படின்.
விளக்கம்:
முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.
குறள் 559:
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடிஒல்லாது வானம் பெயல்.
விளக்கம்:
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
குறள் 560:
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின்.
விளக்கம்:
நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும், அந்தணரும் அறநூல்களை மறப்பர்.
No comments:
Post a Comment