காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 117 : படர்மெலிந்திரங்கல்
குறள் 1161:
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்குஊற்றுநீர் போல மிகும்.
விளக்கம்:
இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.
குறள் 1162:
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்குஉரைத்தலும் நாணுத் தரும்.
விளக்கம்:
இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.
குறள் 1163:
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்நோனா உடம்பின் அகத்து.
விளக்கம்:
துன்பத்தைப் பொருக்காமல் வருந்துகின்ற என் உடம்பினிடத்தில் உயிரே காவடித்தண்டாகக் கொண்டு காமநோயும் நாணமும் இருப்பக்கமாக தொங்குகின்றன.
குறள் 1164:
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்ஏமப் புணைமன்னும் இல்.
விளக்கம்:
காமநோயாகிய கடல் இருக்கின்றது. ஆனால் அதை நீந்திக்கடந்து செல்வதற்கு வேண்டிய காவலான தோணியோ இல்லை.
குறள் 1165:
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவுநட்பினுள் ஆற்று பவர்.
விளக்கம்:
இன்பமான நட்பிலேயே துயரத்தை வரச் செய்வதில் வல்லவர். துன்பம் தரும் பகையை வெல்லும் வலிமை வேண்டும்போது என்ன ஆவாரோ?.
குறள் 1166:
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்துன்பம் அதனிற் பெரிது.
விளக்கம்:
காமம் மகிழ்விக்கும்போது அதன் இன்பம் கடல் போன்றது; அது வருத்தும்போது அதன் துன்பமோ கடலைவிடப் பெரியது.
குறள் 1167:
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்யாமத்தும் யானே உளேன்.
விளக்கம்:
காமம் என்னும் வெள்ளத்தை நீந்தியும் அதன் கரையை யான் காணவில்லை; நள்ளிரவிலும் யான் தனியே இருக்கின்றேன்.
குறள் 1168:
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திராஎன்னல்லது இல்லை துணை.
விளக்கம்:
இந்த இராக்காலம் இரங்கத்தக்கது; எல்லா உயிரையும் தூங்கச் செய்துவிட்டு என்னை அல்லாமல் வேறு துணை இல்லாமல் இருக்கின்றது.
குறள் 1169:
கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்நெடிய கழியும் இரா.
விளக்கம்:
பிரிந்து துன்புறுகின்ற இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.
குறள் 1170:
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்நீந்தல மன்னோஎன் கண்.
விளக்கம்:
காதலர் உள்ள இடத்திற்கு என் மனத்தைப்போல் செல்ல முடியுமானால், என் கண்கள் இவ்வாறு வெள்ளமாகிய கண்ணீரில் நீந்த வேண்டியதில்லை.
No comments:
Post a Comment