பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 103 : குடிசெயல்வகை
குறள் 1021:
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்பெருமையின் பீடுடையது இல்.
விளக்கம்:
குடிப் பெருமைக்கு உரிய கடமையைச் செய்வதற்குச் சோர்வடைய மாட்டேன் என்று ஒருவன் முயலும் பெருமையைப் போல மேம்பாடானது வேறொன்றும் இல்லை.
குறள் 1022:
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்நீள்வினையால் நீளும் குடி.
விளக்கம்:
முயற்சி நிறைந்த அறிவு என்று சொல்லப்படும் இரண்டினையும் உடைய இடைவிடாத செயலால் ஒருவனுடைய குடி உயர்ந்து விளங்கும்.
குறள் 1023:
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்மடிதற்றுத் தான்முந் துறும்.
விளக்கம்:
என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.
குறள் 1024:
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்தாழாது உஞற்று பவர்க்கு.
விளக்கம்:
தம் குடி உயர்வதற்கான செயலை விரைந்து முயன்று செய்வோர்க்கு அவர் ஆராயமலே அச் செயல் தானே நிறைவேறும்.
குறள் 1025:
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்சுற்றமாச் சுற்றும் உலகு.
விளக்கம்:
குற்றம் இல்லாதவனாய்க் குடி
உயர்வதற்கான செயல் செய்து வாழ்கின்றவனை உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து
கொள்வர்.
குறள் 1026:
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்தஇல்லாண்மை ஆக்கிக் கொளல்.
விளக்கம்:
ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்று சொல்லப்படுவது தான் பிறந்த குடியை ஆளும் சிறப்பைத் தனக்கு உண்டாக்கி கொள்வதாகும்.
குறள் 1027:
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்ஆற்றுவார் மேற்றே பொறை.
விளக்கம்:
போர்க்களத்தில் பலரிடையே பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் அஞ்சாத வீரரைப் போல் குடியில் பிறந்தவரிடையிலும் தாங்க வல்லவர் மேல் தான் பொறுப்பு உள்ளது.
குறள் 1028:
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்துமானங் கருதக் கெடும்.
விளக்கம்:
குடி உயர்வதற்கான செயல் செய்கின்றவர்க்கு உரிய காலம் என்று ஒன்று இல்லை, சோம்பல் கொண்டு தம் மானத்தைக் கருதுவாரானால் குடிப்பெருமைக் கெடும்.
குறள் 1029:
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்குற்ற மறைப்பான் உடம்பு.
விளக்கம்:
தன் குடிக்கு வரக்குடிய குற்றத்தை வராமல் நீக்க முயல்கின்ற ஒருவனுடைய உடம்பு துன்பத்திற்கே இருப்பிடமானதோ.
குறள் 1030:
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்நல்லாள் இலாத குடி.
விளக்கம்:
துன்பம் வந்த போது உடனிருந்து தாங்க வல்ல நல்ல ஆள் இல்லாத குடி, துன்பமாகிய கோடாரி அடியில் வெட்டி வீழ்த்த விழுந்துவிடும்.
No comments:
Post a Comment