காமத்துப்பால்
கற்பியல்
அதிகாரம் 133 : ஊடலுவகை
குறள் 1321:
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்வல்லது அவர்அளிக்கு மாறு.
விளக்கம்:
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
குறள் 1322:
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளிவாடினும் பாடு பெறும்.
விளக்கம்:
ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.
குறள் 1323:
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடுநீரியைந் தன்னார் அகத்து.
விளக்கம்:
நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ?.
குறள் 1324:
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்உள்ளம் உடைக்கும் படை.
விளக்கம்:
காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.
குறள் 1325:
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்அகறலின் ஆங்கொன் றுடைத்து.
விளக்கம்:
தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.
குறள் 1326:
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
விளக்கம்:
உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.
குறள் 1327:
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்கூடலிற் காணப் படும்.
விளக்கம்:
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.
குறள் 1328:
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்கூடலில் தோன்றிய உப்பு.
விளக்கம்:
நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?.
குறள் 1329:
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்பநீடுக மன்னோ இரா.
விளக்கம்:
காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.
குறள்
1330:
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்கூடி முயங்கப் பெறின்.
விளக்கம்:
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.
No comments:
Post a Comment