பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 107 : இரவச்சம்
குறள் 1061:
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்இரவாமை கோடி உறும்.
விளக்கம்:
உள்ளதை மறைக்காமல் உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் கண்போல் சிறந்தவரிடத்திலும் சென்று இரவாமலிருப்பதே கோடி மடங்கு நல்லதாகும்.
குறள் 1062:
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான்.
விளக்கம்:
உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
குறள் 1063:
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்வன்மையின் வன்பாட்ட தில்.
விளக்கம்:
வறுமைத் துன்பத்தை இரப்பதன் வாயிலாகத் தீர்ப்போம், என்று கருதி முயற்சியைக் கைவிட்ட வன்மையைப் போல் வன்மையானது வேறு இல்லை.
குறள் 1064:
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்காலும் இரவொல்லாச் சால்பு.
விளக்கம்:
வாழ வழி இல்லாத போதும் இரந்து கேட்க உடன்படாத சால்பு, உலகத்தில் இடமெல்லாம் கொள்ளாத அவ்வளவு பொருமையுடையதாகும்.
குறள் 1065:
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்ததுஉண்ணலின் ஊங்கினிய தில்.
விளக்கம்:
தெளிந்த நீர் போல் சமைத்த கூழே
ஆனாலும், முயற்சியால் கிடைத்ததை உண்பதைவிட இனிமையானது வேறொன்றும்
இல்லை.
குறள் 1066:
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்குஇரவின் இளிவந்த தில்.
விளக்கம்:
பசுவிற்கு நீர் வேண்டும் என்று அறம் நோக்கி இரந்து கேட்டாலும், இர த்தலை விட நாவிற்கு இழிவானது மற்றொன்று இல்லை.
குறள் 1067:
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்கரப்பார் இரவன்மின் என்று.
விளக்கம்:
இரந்து கேட்பதனால் உள்ளதை ஒளிப்பவரிடத்தில் சென்று இரக்க வேண்டுடாம் என்று இரப்பவர் எல்லோரையும் இரந்து வேண்டுகின்றேன்.
குறள் 1068:
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்பார்தாக்கப் பக்கு விடும்.
விளக்கம்:
இரத்தல் என்னும் காவல் இல்லாத மரக்கலம் உள்ளதை ஒளித்துவைக்கும் தன்மையாகிய வன்னிலம் தாக்கினால் உடைந்து விடும்.
குறள் 1069:
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ளஉள்ளதூஉம் இன்றிக் கெடும்.
விளக்கம்:
இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.
குறள் 1070:
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்சொல்லாடப் போஒம் உயிர்.
விளக்கம்:
இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ.
No comments:
Post a Comment