பொருட்பால்
குடியியல்
அதிகாரம் 105 : நல்குரவு
குறள் 1041:
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்இன்மையே இன்னா தது.
விளக்கம்:
வறுமையைப் போல் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும்.
குறள் 1042:
இன்மை எனவொரு பாவி மறுமையும்இம்மையும் இன்றி வரும்.
விளக்கம்:
வறுமை என்று சொல்லப்படும் பாவி ஒருவனை நெருங்கினால், அவனுக்கு மறுமையின்பமும், இன்மையின்பமும் இல்லாமற் போகும் நிலைமை வரும்.
குறள் 1043:
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாகநல்குரவு என்னும் நசை.
விளக்கம்:
வறுமை என்று சொல்லப்படும் ஆசைநிலை ஒருவனைப் பற்றினால், அவனுடைய பழைமையானக் குடிப் பண்பையும் புகழையும் ஒரு சேரக் கெடுக்கும்.
குறள் 1044:
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்தசொற்பிறக்கும் சோர்வு தரும்.
விளக்கம்:
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.
குறள் 1045:
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்துன்பங்கள் சென்று படும்.
விளக்கம்:
வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.
குறள் 1046:
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்சொற்பொருள் சோர்வு படும்.
விளக்கம்:
நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.
குறள் 1047:
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்பிறன்போல நோக்கப் படும்.
விளக்கம்:
அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.
குறள் 1048:
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்கொன்றது போலும் நிரப்பு.
விளக்கம்:
நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்.
குறள் 1049:
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்யாதொன்றும் கண்பாடு அரிது.
விளக்கம்:
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.
குறள் 1050:
துப்புர வில்லார் துவரத் துறவாமைஉப்பிற்கும் காடிக்கும் கூற்று.
விளக்கம்:
நுகரும் பொருள் இல்லாத வறியவர் முற்றுந் துறக்க கூடியவராக இருந்தும் துறக்காத காரணம், உப்புக்கும் கஞ்சிக்கும் எமனாக இருப்பதே ஆகும்.
No comments:
Post a Comment